குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டொக்ஹோமில் உள்ள ரோயல் சுவீடன் அறிவியல் அகடமி நேற்று (04) வெளியிட்ட அறிவிப்பில், நடப்பாண்டுக்கான நோபல் பரிசு, 3 இரசாயன விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மெளங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், இராசாயனவியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று குவாண்டம் புள்ளிகள் நானோ தொழில்நுட்பத்தின் டூல் பெட்டியின் முக்கிய பகுதியாக உள்ளன. இரசாயனவியலில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர். நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர், சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும். பரிசுத் தொகை மேற்கண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று (05) அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு நாளைய தினத்திலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் (9) அறிவிக்கப்படவுள்ளன. நோபல் பரிசை நிறுவிய சுவீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதை வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.