தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு செயலணியினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை துப்புரவு செய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில், நுளம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானதாகும், இது தொடர்பாக மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி ஊடாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடமளிக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ள வேண்டுமெனவும் அறிவித்துள்ளார்.
டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருப்பவர்கள் துப்புரவு செய்யுமாறும் அதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)