– பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவிப்பு
இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 56 நகரங்களில் உள்ள 100 விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக, பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் சுட்டிக் காட்டியுள்ளார்.
27,500 ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ளதுடன் பாடசாலை விடுமுறை நாட்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதால் குறித்த நாட்களுக்கு மேலதிகமாக எந்த பாடசாலையும் மூடுவதற்கு அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்காக 472,554 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்ததுடன் அதில் தோற்றிய சுமார் 90 சதவீத பரீட்சார்த்திகளின், 2.6 மில்லியன் விடைத்தாள்கள் இவ்வாறு மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக, பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.