உயர் ஸ்தானிகர், தூதுவர், 2 நிறுவனத் தலைவர்களின் நியமனத்திற்கு அனுமதி

- அவுஸ்திரேலியா, இஸ்ரேலுக்கு புதிய தூதுவர்கள்
- RDA, லொத்தர் சபைக்கு புதிய தலைவர்கள்
- பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அறிவிப்பு

புதிய உயர் ஸ்தானிகர் ஒருவர், தூதுவர் ஒருவர் மற்றும் நிறுவனத்தலைவர்கள் இருவரை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக திருமதி சித்ராங்கனி வாகிஸ்வரவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசுக்கான புதிய தூதுவராக எம்.எச்.எம்.என். பண்டாவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கமத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்கவின் நியமனமும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டதாக தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார்.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைவராக சி.பீ. அதுலுவகேவின் நியமனம், மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக என்.கே.ஏ.ஜீ. நாரகலவின் நியமனமும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியது.


Add new comment

Or log in with...