முன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்

முன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்-Pre schools to be brought under a Ministry
மாத்தறை மாவட்டத்தில் இன்று (25) பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...

- ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
- முன்பராயம், ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமத்துடன் அமைவது அவசியம்

முன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சென்ற வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராய அபிவிருத்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரம்
பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (25) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அபேட்சகர் நிபுண ரணவக்க மாத்தறை கடற்கரை பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

நிபுன ரணவக்கவின் 2020 தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை உள்ளடக்கிய இணையத்தளமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ருகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் மாத்தறை மாவட்ட சுற்றுப் பயணம் ஆரம்பமானது. உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இணையவழி மூலமான கற்பித்தல் செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக உபவேந்தர் தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தெவிநுவர தேவாலயத்திற்கு முன்பாக உள்ள விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரதேச மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள தெவிநுவர தேவாலயத்தின் புண்ணியபூமி மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்து தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, விரைவாக அப்பணியை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அபேட்சகர் மனோஜ் சிறிசேன மாத்தறை உயன்வத்த விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடினார்.


Add new comment

Or log in with...