மெண்டிஸ், மெதிவ்ஸ் சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி

குசல் பெரேரா துடுப்பாட்டத்தின்போது...

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை அணி தற்போது 3 விக்கட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

எவ்வித ஓட்டங்களையும் பெறாத நிலையில் தனது முதலாவது விக்கட்டை இழந்த இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட் 9 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் பறிபோனது.

இந்நிலையில் 3 ஆவது விக்கட்டுக்காக இணைந்த குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் இணைப்பாட்டமாக 108 ஓட்டங்கள் பெறப்பட்டதோடு, 49 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் குசல் பெரேரா ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ், குசல் மெண்டிசுடன் இணைந்து நிதானமான துடுப்பாட்டத்தை வழங்கி வருகின்றார்.

தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ் தற்போது 81 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, மெத்திவ்ஸ் 35 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

குறித்த இருவரும் இணைந்து இலங்கை அணி சிறந்த ஓட்ட நிலையை அடைய உதவுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...