நேற்றையதினம் (21) தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவத்தை வீதி பகுதியில் இடம்பெற்றம் விபத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 52 வயதான மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் பின்புறமாக காரில் வந்த நபர் அவரை மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேண்டுமென்றே இவ்விபத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காரின் சாரதி வீதியின் இடது பக்கமாக இருந்த தடுப்பின் மீது கவனக்குறைவாக காரை செலுத்திச் சென்ற போது அதன் டயர் ஒன்றிலிருந்து காற்று வெளியேறியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த குறித்த நபர், அதனை காரின் சாரதிக்கு விளக்க முற்பட்ட நிலையில், அதனை தவறாக புரிந்து கொண்ட காரின் சாரதி அவரை மோதி இவ்விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்றையதினம் (22) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.