காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அல்ஜீரியா கொண்டுவந்துள்ள தீர்மானம் பாதுகாப்புச் சபையில் நாளை (20) வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப வரைவு ஒன்றை அல்ஜீரியா இரு வாரங்களுக்கு முன் கொண்டுவந்தபோதும், இது போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையில் குழப்பத்தை உருவாக்கும் என்று அமெரிக்கா கூறியிருந்தது..
இந்நிலையில் இதன் மீது வாக்கெடுப்பை நடத்தும்படி அல்ஜீரியா பாதுகாப்புச் சபையை சனிக்கிழமை (17) கேட்டுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளின் வீட்டோ இன்றி குறைந்தது ஒன்பது வாக்குகளை பெற வேண்டும்.
“இந்தத் தீர்மான வரைவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கப்போவதில்லை. அது கொண்டுவரப்பட்டால் நிறைவேற்றப்படமாட்டாது” என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் கரீன்பீல்ட் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவில் இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாத்து வரும் அமெரிக்கா கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இதுவரை இரு முறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.