ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து விலகிச்செல்லும் நிலையை உருவாக்குகின்றார். கட்சியை நாளாந்தம் பலவீனப்படுத்துகின்றாரென்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே மக்கள் விடுதலை முன்னணியினரால் அதிகளவு மக்கள் ஆதரவை பெறமுடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவருக்கு அப்பால் வேறு இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி உள்ளதென்பதை நான் தெரிவிக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க, அவர்கள் யார் என்பதை நேரம் வரும்போது வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது குடும்ப வர்த்தகமாக மாறியுள்ளது. கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகின்றது.
ஜனநாயகம் என்ற எதுவும் கட்சிக்குள் இல்லை எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியின் உரை குறித்து பாராளுமன்ற விவாதம் நடைபெற்றவேளை தனக்கு உரையாற்றுவதற்காக சந்தர்ப்பத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் வழங்காதமை குறித்து பண்டாரகமவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் சம்பிக்க ரணவக்க கடுமையாக சாடியுள்ளார்.
நான் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டது உண்மை. தற்போது நான் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றேன்.
நான் உரையாற்றுவதற்கான அனுமதியை கோரியவேளை எதிர்கட்சிதலைவரினால அது நிராகரிக்கப்பட்டுவிட்டதாக லக்ஸ்மன்கிரியல்ல எம்.பி தெரிவித்தார் என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.