சமாதான நீதவான் நியமனத்தை பெறுவதற்கான கல்வித் தகைமை தொடர்பில் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சமாதான நீதவான்களுக்கான கல்வித் தகைமை தொடர்பில் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் (27) வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி, சமாதான நீதவானாக நியமனம் பெறுவதற்கான நிபந்தனையாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த 13.02.2024 இல், நீதி அமைச்சரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிபந்தனையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கு கல்வித் தகைமையாக இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் பரீட்சைக்கு தோற்றி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 02 திறமை சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இக் கல்வித் தகுதியை பெற்றிராத ஒருவரான , பிரசித்தமான மதத் தலைவரோ அல்லது சங்கத் தலைவரோ சமாதான நீதவானாக நியமிக்கப்பட தகுதியானவரென பரிந்துரை செய்யும் பட்சத்தில், நீதி அமைச்சருக்கு, அவரை சமாதான நீதவானாக நியமிக்க முடியுமென புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.