நெற்செய்கையில் பீடைத் தாக்கத்தால் ஏற்படும் அழிவை இயற்கை அழிவாகக் கருதி எதிர்காலத்தில் இழப்பீடு வழங்க முடியுமாவென்று ஆராய்ந்து வருவதாக, வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு தேராவில் விவசாயப் பண்ணையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற அறுவடை விழாவில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
காலபோகத்தில் குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டம் உள்ளது. பீடைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட, ஏற்கெனவே காப்புறுதி செய்தவர்களுக்கு மாத்திரமே அதற்கான இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும். ஆயினும், எதிர்காலத்தில் இதனை இயற்கை அழிவாகக் கருதி அதற்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்காலத்தில் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி உரிய நீர் முகாமைத்துவம் மூலம் நவீன விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
பரந்தன் குறூப் நிருபர்