நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ‘மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச நீர் மாநாடு 2023, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இரத்மலானை பிரதான அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு துறையின் அபிவிருத்திகள் தொடர்பில் உரையாற்றினார்.
அத்துடன் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சமரதிவாகர, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க ஆகியோரும் இதன்போது உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட உலக வங்கியின் சர்வதேச நீர் இயக்குனர் சரோஜ் குமார் ஜா, நீர் பாதுகாப்பு, பசுமை நெகிழ்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை நிகழ்ச்சி நிரலை நிறுவுவதற்கான உலகளாவிய கூட்டு நடவடிக்கை குறித்த தனது அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டார்.
நிபுணத்துவ அமர்வுகள், வர்த்தக அமர்வுகள், தொழில்நுட்ப அமர்வுகளுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் களவிஜயம் ஆகியனவும் இம்மாநாட்டின்போது நடைபெற்றன.
நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு துறையில் மாற்றத்தை துரிதப்படுத்தும் வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மாற்றம் மற்றும் நீர் வள முகாமைத்துவம் ஆகியவற்றுக்கான நிலையான தீர்வுகள் பற்றிய பயனுள்ள விரிவுரைகள் உலகெங்கிலுமுள்ள தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களினால் நிபுணத்துவ அமர்வுகளின்போது நிகழ்த்தப்பட்டன. வர்த்தக அமர்வுகளின்போது நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு துறையின் முன்னணியின் ஒத்துழைப்புடன் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டன.