இலங்கைக்கும் நியூசிலாந்துக்குமிடையே இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும், தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை விரைவில் மீண்டும் திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
கொவிட்-19 இன் சவால்கள் மற்றும் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் மீண்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.மூன்று வருடங்களுக்கு முன்னர் தாம், இலங்கைக்கு வந்த போது, நாடு கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டு ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நெருக்கடி நிலையை சிறப்பாக முகாமைத்துவம் செய்தமையால் தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதாகவும் உயர்ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார். முதலில் வெளிவிவகார அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் அரசாங்கத்துறை சீர்திருத்த திட்டத்துக்கு நிபுணத்துவத்தை வழங்கியமைக்காக நியூசிலாந்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.