இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக மீனவர்கள் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் அவதானித்ததோடு, விரைவு தாக்குதல் படகுகளை அனுப்பி அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேற்றும் வகையில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.விசேட நிருபர்