சபையில் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி தெரிவிப்பு
கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் சபையில் உறுதியளித்தபடி உடனடியாக பதவி விலக வேண்டுமென மஹிந்தானந்த அளுத்கமகே எம்பி சபையில் தெரிவித்தார். இந்நிதிப் பிரயோகம் சட்டத்துக்கு முரணானதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்படவில்லையென புத்த சாசன,மத விவகார, கலாசார அமைச்சரும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான கணக்காய்வு அறிக்கையை நான் சபையில் சமர்ப்பித்துள்ளேன்.
இதன் மூலம் இந்த மோசடி உறுதியாகியுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் தமது மனைவியின் சலூனுக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டுள்ளமை தொடர்பிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் பாராளுமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, பாராளுமன்றத்தின் கௌரவத்தை மதித்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அது தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, கலாசார அமைச்சுக்கான செயல்பாடுகள் அனைத்தும் அமைச்சரவை அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. சபையில் இதை, தாம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்