பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் போன்று தம்மைக் காட்டிக்கொண்டு நிதியுதவி வழங்குவதாகக் கூறி, நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்வதற்கு நிதி உதவி வழங்குவதாகவும், சிறுவர்களுக்கான புத்தகங்களை வழங்குவதாகவும் கூறி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு மக்களிடமிருந்து கட்டணமாக 600 ரூபா வசூலித்துள்ளனர். அரச சார்பற்ற நிறுவன அதிகாரியாகத் தன்னைக் காட்டி மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தமைக்காக சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண், ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர் கட்டணமென ஏமாற்றி வசூலித்த 26 ஆயிரம் ரூபா பணத்துடன் அத்திமலே, கெமுனுபுர பிரதேசத்தில் வைத்து (05) பெண் கைது செய்யப்பட்டார். இவர் கூட்டுறவு கிராம வங்கியில் பொதுமக்களை ஏமாற்றி ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பெற்று அதை வங்கியில் வைப்புச் செய்திருந்தார்.
இதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளாக வேடம் அணிந்து பொதுமக்களை ஏமாற்றி 70 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட சியம்பலாண்டுவ, மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணுமே கைதானவர்களாவர். இந்நிலையில், சந்தேகநபர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறு செயற்பட்டார்களா? என்பது தொடர்பில் அத்திமலே மற்றும் சியம்பலாண்டுவ பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.