சட்ட மாஅதிபரிடம் ஜனாதிபதி அலுவலகம் கேள்வி
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் கேள்வி எழுப்ப முடியுமா? என, சட்ட மாஅதிபரிடம் ஜனாதிபதி அலுவலகம் வினவியுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை தீர்மானங்களை, சிறப்புரிமை பிரச்சினைகளாக கருதி சவால் விடுவதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இதை, கவனத்தில் கொண்டே மேற்படி விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்துக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறான சிறப்புரிமை விடயங்களை முன்வைப்பது பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்வதாக அமையுமா? என்பதை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் சட்ட மாஅதிபரிடம் கோரியுள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஜனாதிபதி மற்றும் நீதிபதிகளை இணைத்து பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினைகளை எழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி அலுவலகம் சட்ட மா அதிபரிடம் வினவியுள்ளது.