வெள்ளநீரை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
இறக்குவானை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் அப்பகுதியில் பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இறக்குவானை நகரின் பஸ்தரிப்பிடம், வீடுகள், வியாபார நிலையங்கள், பள்ளிவாசல், உக்வத்த கிராமம், எல்ட்டன் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்துவருகின்றனர். நிரம்பிய நீரை அகற்றும் பணிகளில் பிரதேச மக்கள் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையை அடுத்து இறக்குவானை நகரை ஊடறுத்துச் செல்லும் ஆறு பெருக்கெடுத்தமையால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
எல்ட்டன் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதால் அதன் நிர்மாணப்பணிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இறக்குவானை தெனியாய வீதியில் சிறிய வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பகுதியில் கொதித்தாறிய நீரைப்பயன்படுத்துமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)