தென்னாபிரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை மூடுவது மற்றும் அதனுடனான இராஜதந்திர உறவை இடைநிறுத்துவது தொடர்பில் தென்னாபிரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.
எனினும் ஜனாதிபதி சிரில் ரமபோசா அரசே இதனை செயற்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றிருப்பதால் இந்த வாக்கெடுப்பு ஓர் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 248 வாக்குகள் கிடைத்ததோடு 91 வாக்குகள் எதிராக பதிவாகின. தென்னாபிரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதுவரை இஸ்ரேல் ஆலோசனைக்காக திரும்ப அழைத்துக் கொண்ட நிலையிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
முற்றுகையில் உள்ள காசாவில் இஸ்ரேல் போர் குற்றம் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என தமது நாடு நம்புவதாக ரமபோசா குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்கா 2018 தொடக்கம் இஸ்ரேலுக்கு தூதுவரை நியமிக்கவில்லை என்பதோடு, பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறது.