சுகாதார அமைச்சு வளாகத்தில் விரைவில் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறலை பதிவு செய்யும் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர்.
சுகாதாரப் பணியாளர்கள் கைரேகை வைத்து சேவைக்கு வர மறுப்பது ஏன்? என சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு கேள்வி எழுப்பிய போதே அமைச்சின் அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
அரச நிறுவனங்களில், கைரேகை இயந்திரங்கள் ஊடாக பணியாளர்களின் வருகை மற்றும் வெளியேறலை உறுதிப்படுத்துவது தொடர்பாக 2017 இல்,பொது நிர்வாகச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த சுற்றறிக்கைக்கமைய 31.08 மில்லியன் ரூபா செலவில் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது குறித்து இந்த உபகுழு கேள்வி எழுப்பியது. கைரேகை வைத்து சேவைக்கு வருவதை சுகாதாரப் பணியாளர்கள் எந்தக் காரணத்துக்காக மறுக்கிறார்கள் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர், இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், பணியாளர்களின் எதிர்ப்பினால் இது நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. சுகாதார அமைச்சின் வளாகத்தில் விரைவில் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்..
பொதுவான முறைமை ஊடாக அரச சேவையை வினைத்திறனாகவும் ஊழலற்ற சேவையாகவும் மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் சுகாதார சேவையும் இணைந்து கொள்ள வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.