நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தும் அருகதை எவருக்கும் கிடையாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துக் கொண்டிருக்காமல் உரிய தரப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தினால் நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை கடுமையாக விமர்சிப்பதை தவிர்க்க முடியாது என குறிப்பிட்ட அவர் மீதியாகவுள்ள கௌரவமும் இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பொருளாதார மீட்சிக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த திட்டங்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் -04 நிறுவனம் வெளியிட்ட காணொளிகள் வெறும் திரைப்படமாக்கப்பட்டு விட்டன.
பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்ய எவருக்கும்அருகதை கிடையாது என்பதால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்று இதுவரை காலமும் பேசப்பட்ட விடயத்துக்கு உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவிக்கின்றோம். நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரச தரப்பினர் மாறு பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக இந்த வழக்கு விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும்,நீதியரசர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யவும் கோருகின்றார்கள் .
நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தும் அருகதை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற தெரிவு குழுக்கள் தோல்வியடைந்துள்ளமைக்கு பல விடயங்கள் ஆதாரமாகவுள்ளன..
பொருளாதார பாதிப்பினால் சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் வியாபாரம்,விபசாரம் போன்ற சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இது சிறந்ததொரு நிலையல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்