சாதாரண பிள்ளைகளிலிருந்து பல்வேறு காரணிகளால் வேறுபட்டுக் காணப்படும் பிள்ளைகளுக்காக வழங்கப்படும் கல்வி விசேட கல்வி என அழைக்கப்படுகின்றது.
ஏனையோரிலும் பார்க்க விசேட கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய நிலையில் உள்ள குறித்துக்காட்டத்தக்க தேவைப்பாடுடையோரே விசேட தேவையுடையவராகக் கருதப்படுகின்றனர். இதன்படி சில வகையான உடல், உள, பார்வைக் குறைபாட்டை நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கொண்டிருந்து அதனால் நாளாந்த வாழ்க்கைக்கு அவசியமான நடவடிக்கைகளை ஆற்றுவதற்குத் தேவையான ஆற்றல்கள் எல்லைப்படுத்தப்பட்ட பிள்ளைகளை விசேட தேவையுடைய பிள்ளைகள் எனலாம்.
மேலும், வகுப்பறையில் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் செயன்முறையின் மூலம் பயன்தர முடியாத அளவுக்கு கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளையும் விசேட தேவையுடைய பிள்ளைகள் எனலாம்.
விசேட தேவையுடைய பிள்ளைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
உடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்கும் பிள்ளைகள், உளம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்கும் பிள்ளைகள், ஒழுக்க நடத்தை கோளாறுடைய பிள்ளைகள், கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள்
மீத்திறன் பிள்ளைகள்:
‘சாதாரணம்’ எனக் கருதப்படும் பிள்ளைகளிலிருந்து அவர்களின் தேவைகள் வேறுபட்டுக் காணப்படுவதனால் மீத்திறன் மற்றும் செயற்றிறன் உள்ள பிள்ளைகளும் விசேட தேவையுடைய பிள்ளைகளாகக் கருதப்படுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியினை வழங்குவதனூடாக அவர்கள் சார்ந்த சமூகங்களும் மேம்பாடடைய துணைபுரியலாம். இவ்வாறான பிள்ளைகள் தொடர்பாக சாதாரண வகுப்பறை வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பிரதிபலன் பெற முடியாது. அவர்களுக்கான விசேட கற்பித்தல் முறைகளை கையாளுதல், அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துதல் என பல துறைகளில் அதிக கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. இலங்கையிலும் விசேட தேவை உடையோருக்கான கல்வியினை வழங்குவதற்கு கல்வி அமைச்சின் விசேட கல்விப் பிரிவு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஹ/இக்ரா ஆரம்ப வித்தியாலயத்தில் சாதாரண வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களிடையே விசேட தேவையுடைய பிள்ளைகளும் வகுப்பாசிரியர்களினால் இனங்காணப்பட்டமையினை அடுத்து, அவர்களை சாதாரண வகுப்பறைகளில் சாதாரண மாணவர்களுடன் சேர்த்து கற்பிப்பதில் பல சவால்களை ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்நோக்க நேரிட்டது.
இது தொடர்ந்து சில வருடங்களாக இனங்காணப்பட்ட பிரதான ஒரு சவாலாக இருந்தமையினால், விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பாக பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள், கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக ஏராளமான மாணவர்கள் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடப்பதை அவதானிக்க முடிந்தது.
(13ஆம் பக்கம் பார்க்க)
R.Rinosha…
B.A. (First Class Honours in
Political Science & Public Policy),
PGDE (R), SLTS, Iqra Primary Vidyalaya, Hambantota