கிழக்கில் இரண்டாவது தடவையாக நில அதிர்வு பதிவாகியுள்ளமையால் பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு இந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது நில அதிர்வாகும், எனவே எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய நில அதிர்வு அனர்த்தங்கள் தொடர்பில் பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
திருகோணமலை ,மொறவேவ பிரதேசம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடந்த 12ஆம் திகதி 3.4 ரிச்டர் அளவைக்கொண்ட நிலஅதிர்வு உணரப்பட்டது.
இவ்வதிர்வை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் உணர முடிந்தது.
இந்நிலையில் எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய நில அதிர்வு அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய முன்னாயத்த பயிற்சிகள் மற்றும் அறிவூட்டலை பாடசாலைகள், வைத்தியசாலைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பவற்றுக்கு வழங்குவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளோம்.
அதற்கமைய எதிர்காலத்தில் பொருத்தமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சியும் கலந்து கொண்டார்.
(திருகோணமலை தினகரன் நிருபர்)