பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி அக்கரப்பத்தனை, டயகம கிழக்கு தோட்டத் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (02) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரப்பத்தனை, டயகம ஈஸ்ட் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய தொழிலாளர்கள், முற்பணக் கோரிக்கையை முன்வைத்தனர். வருகை வீதத்துக்கமைய, தீபாவளி முற்பணத்தை வழங்கும் நடைமுறை காரணமாக ஒரு சிலருக்கு மாத்திரம் 20,000 ரூபா முற்பணம் கிடைத்துள்ளதாகவும்
இதனால் ஏனையோர் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
டயகம கிழக்கு தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் நாட்களில் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், 70% வரவைக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு மாத்திரம் 20,000 ரூபா முற்பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு குறைவான வரவைக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு அதற்கமைவான முற்பணமே வழங்கப்படுமெனவும், பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.