நீக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் சேவையில் இணைப்பு
பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் (பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான) டிரான் அலஸ் ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில், பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியலமைப்பு சபை எடுத்த முடிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று (17) ஒரு மணித்தியாலத்திற்குள் மாற்றியமைத்தார்.
பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உத்தரவுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவின் பீஜிங்கிலிருந்து உடனடியாக வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும், பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சராக டிரான் அலஸும் இலங்கையில் இல்லாத போது, பொலிஸ் மா அதிபரை அரசியலமைப்புச் சபை நீக்கியது பாரிய தவறு என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொலிஸ் மா அதிபரின் பதவி நீக்கம் சதித்திட்டமா என சந்தேகம் நிலவுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி இலங்கைக்கு வருவதற்கு முன்னர் ‘போதைப்பொருள் கடத்தல்காரர்களை பாதுகாப்பதற்கான பின்னணி உருவாக்கப்படும் என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறதென சிரேஷ்ட அமைச்சர் கூறினார். இது தொடர்பில் உடனடியாக கண்டறியவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பொலிஸுக்குப் பொறுப்பான மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் நாட்டில் இல்லாத வேளையில் பொலிஸ் மா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது நாட்டிலுள்ள முழுப் பொலிஸ் திணைக்களத்தையும் முடக்குவதற்குச் சமமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.