IMF இடமிருந்து இலங்கை பெறவுள்ள இரண்டாம் தவணை நிதி உதவிக்கு உறுதுணையாக இருக்குமென நிதி அமைச்சு நம்பிக்கை
கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கையில் இலங்கையும் சீனாவின் எக்ஸிம் வங்கியும் இணங்கியுள்ளன.
இதற்கிணங்க 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்கும் முக்கிய கொள்கைகளில் இலங்கையும், சீனாவின் எக்ஸிம் வங்கியும் இணங்கிச் செயற்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான கடன் மறு சீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கி மேற்கொண்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில், மேற்படி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த இணக்கப் பாடானது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ள இரண்டாம் தவணை நிதிக்கு உறுதுணையாக அமையும் என்றும் நிதி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க கடன் மறு சீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகள் நாட்டின் நீண்ட கால கடன் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதற்கும் வழி வகுக்கும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையானது 46 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வெளிநாட்டுக் கடனாக பெற்றுக் கொண்டுள்ளது. அதில் 52 வீதத்தை சீனாவே இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அதே வேளை, 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கையளவிலான இணக்கப்பாடு, இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)