நமது தகுதிகளைக் கணக்கிடாமல் அவரின் குழந்தைகளாகிய நம்மை அன்பு செய்யும் கடவுளின் அளவுகோல்களை திராட்சைத்தோட்ட வேலையாட்கள் உவமை வழியாக கடவுள் நமக்குக் காட்ட விரும்புகிறார்.
ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் நம்மை அழைப்பதற்காக வருகின்றார். ஒரே அளவு அன்பைக் கொடுக்கின்றார் என்பதன் அடிப்படையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சூரியன் உதித்த நேரம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை வெளியில் சென்று பணியாளர்களை வேலைக்கு அமர்த்திய கடவுள், சோர்வடையாமல் மனிதர்களைத் தேடி நாள்முழுவதும் வெளியே செல்கின்றார் என்றும் அவரை சென்றடைய நாம் முயற்சி எடுக்கும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே அவர் நம்மைத் தேடி வந்து விடுகின்றார்.
என்றும் தெரிவித்தார்.
புனித பெரிய கிரகரி மாங்னோவின் வார்த்தைகளான “முதுமை வரை நம் வாழ்வின் வெவ்வேறு பருவங்களையும் நேரங்களையும் அடையாளப்படுத்தும் எல்லா வேளைகளிலும் கடவுள் நம்மைத் தேடுகிறார், அவரது இதயம் ஒருபோதும் தாமதிக்காது. அவர் நம்மைத் தேடுகிறார். எப்போதும் நமக்காகக் காத்திருக்கிறார்” என்பதனையும் இதன்போது நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.
கடவுள் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருப்பதால் அனைவருக்கும் ஒரே சமனான கூலியாகக் கொடுப்பதன் வழியாக அவருடைய அன்பை வெளிப்படுத்துகின்றார். “அவரவர்களுக்குத் தகுதியானதைக் கொடுங்கள்” என்று கூறுவது மனித நீதி என்றும் அனைவருக்கும் சமமாகக் கொடுப்பது கடவுளின் நீதி என்றும் அவர் தெரிவித்தார்
கடவுளின் நீதியானது நமது வருமானம், செயல்திறன் மற்றும் தோல்விகளின் அளவுகோல்களில் அன்பை அளவிடுவதில்லை. கடவுள் நம்மை அன்புசெய்கின்றார். அவரது குழந்தைகளாக இருப்பதால் அவர் நம்மை நிபந்தனையற்ற வகையில் இலவசமாக அன்பு செய்கின்றார்.
சில சமயங்களில் நாம் கடவுளுடன் வர்த்தக ரீதியான உறவை வைத்திருக்கும் அபாயம் உள்ளது.அவரது தாராள மனப்பான்மை அருளை விட நமது திறமையில் அதிக கவனம் செலுத்துகிறோம். நாமும் திருஅவைகளும் உள்ளிருந்து வெளியே சென்று எல்லோரையும் கைகளைத் திறந்து வரவேற்க வேண்டும் என்றும் இதன்வழியாக கடவுள் அவர்களையும் அன்பு செய்கின்றார் என்பதனை எடுத்துரைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
மெரினா ராஜ்