வெல்லவாய எரிபொருள் நிலையத்தில் களேபரம்

பொலிஸ் அதிகாரி காயம்; 13பேர் கைது  

வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

 13சந்தேகநபர்களையும் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

வெல்லவாய நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு, எரிபொருள் கையிருப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

இதனையடுத்து பொதுமக்கள் எரிபொருள் நிலையத்தின் மீது கற்கள் மற்றும் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததுடன், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் சில சேதங்கள் ஏற்பட்டன.  

சம்பவம் தொடர்பில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 20 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.  


Add new comment

Or log in with...