31 தமிழக மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து  பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது தமிழக மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றநிலையில், ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2 வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதையும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழக மீனவர் சமூகத்திடையே, குறிப்பாக பாக். நீரிணைப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துகிறேன்.

அதனுடன் தமிழகத்தைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோருகிறேன்.


Add new comment

Or log in with...