“சவாலை வெற்றி கொண்ட சுபிட்சமானதொரு தாய்நாடு”; 74 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம்

பிரதமர் தலைமையில் ஏற்பாட்டுக்குழு கூட்டம்

74ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் -2022ஏற்பாட்டுக்குழுவின் முதலாவது குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (29) நடைபெற்றது.

“சவாலை வெற்றி கொண்ட சுபிட்சமானதொரு தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் 74ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் கொண்டாட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தீர்மானித்தார்.

தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சகல இராஜதந்திரிகளுக்கும் 74ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு  பிரதமர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு இதன்போது தெரிவித்தார்.

74ஆவது சுதந்திர தினத்தை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்து இதன்போது பிரதமரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுதந்திர தினத்திற்கு முன்னதாக நடைபெறும் தர்ம உபதேச நிகழ்வினை 2022பெப்ரவரி 02ஆம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவ சமய வழிபாடுகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் என்பவற்றை பரிந்துரைக்கும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளை முறையான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முழுமையாக தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே பங்கேற்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், ஜனக பண்டார தென்னகோன், வாசுதேவ நாணயக்கார, பிரதமரின் செயலாளர் காமினி எஸ்.செனரத், அமைச்சின் செயலாளர்களான எஸ்.ஆர்.ஆட்டிகல, அனுராத விஜேகோன், பேராசிரியர் கபில குணவர்த்தன, ஜே.ஜே.ரத்னசிறி, என்.எச்.எம்.சித்ரானந்த, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மேல் மாகாண தலைமை செயலாளர் ஜே.சீ.ரணேபுர, திலக் ஹெட்டிஆராச்சி, எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்த, சிரேஷ்ட உதவி செயலாளர்களான பிரியங்க நாணயக்கார, நயனா சங்கல்லுலிகே, ஜனாதிபதி செயலக பணிப்பாளர் நாயகம் (ஊடகம்) சுதேச ஹெட்டிஆராச்சி, பணிப்பாளர் (ஊடகம் மற்றும் தொடர்பாடல்) சுரேன் நுவன் தாரக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.