கலாநிதி குசலதம்ம மகா நாயக்க தேரரின் மறைவுக்கு சர்வமதத் தலைவர்கள் அனுதாபம்

இலங்கைத் தாய்த்திருநாட்டின் இன, மத ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புக்களோடு உழைத்து வந்த களனி பல்கலைக்கழகத்தின் வேந்தரும், கொழும்பு - சிலாபம் பிரிவுக்கான பிரதான சங்க நாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய கலாநிதி வெலமிட்டியாவே குசல தம்ம மகா நாயக்க தேரரின் திடீர் மறைவு மிகுந்த கவலைக்கும் வேதனைக்குமுரியதாக அமைந்திருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமரின் மத விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்களான சர்வமதத் தலைவர்கள் அதி வண. கலாநிதி கஸ்ஸப நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அல் ஹாஜ் அஸ் ஸெய்யது கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரி மற்றும் அருட் தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

இன, மத ஒற்றுமைக்காக உழைத்துவரும் இந்த சர்வமதத் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அதி வணக்கத்திற்குரிய மறைந்த குசல தம்ம மகாநாயக்க தேரர் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலக மக்கள் மத்தியிலும் சாந்தி, சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக மிகவும் பொறுப்புடன் தம் செயற்பாடுகளை மிகுந்த ஒத்துழைப்புக்களோடு முன்னெடுத்துள்ளார்.  களனி பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருந்து சேவையாற்றிய காலகட்டத்தில் தம்முடன் சேவையாற்றிய பேராசிரி யர்கள், கலாநிதிகள் மற்றும் பட்டப்படிப்பு மாணவ, மாணவிகளுடன் அன்பாகவும் பண்பாகவும் நெருங்கிப் பணியாற்றிய மகாநாயக்க தேரர் இன, மத மற்றும் தேசிய ஒற்றுமைக்கு உச்ச மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கி செயற்பட்டார். அவரது கௌரவமான செயற்பாடுகளின் ஊடாக புத்தர் பெருமானின் உயரிய பண்புகளைக் காணக்கூடியதாக இருந்தது. 

இலங்கையின் முக்கியத்துவம்மிக்க தேரர்களில் ஒருவராக இருந்து சேவையாற்றி வந்த மகாநாயக்க தேரர், இந்நாட்டில் இன, மத ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய சிக்கல்கள் உருவான சந்தர்ப்பங்களில் எல்லாம் முன்வந்து இன, மத ஒற்றுமையைப் பாதுகாக்கவும் இனங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும் கௌரவமான பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளார்.   அதி வண. குசல தம்ம மகாநாயக்க தேரர் போன்று நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் ஆற்றக்கூடிய உயரிய பண்புகள் கொண்ட தேரர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டில் உருவாக வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம். அவரது மறைவு இலங்கை மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலகில் அமைதி, சமாதானததை விரும்பும் சகல இன, மத மக்களுக்கும் பாரிய இழப்பும் மிகுந்த சோகம் நிறைந்த நிகழ்வுமேயாகும் என்றும் அவர்கள் அந்தஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.