ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹரா வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹரா வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இன்று 13ஆம் திகதி வழமையான சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இம்முறை பெரஹரா உற்சவத்துக்கு வருகை தர மாட்டார்கள்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் பெரஹரா இம்முறை நடைபெறுகின்றது.

மல்வத்தை, அஸ்கிரிய, உபய மஹாநாயக்கர்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தோரின் ஆலோசனைகளின் பிரகாரம் இம்முறை பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் இன்றி பெரஹராவை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது .

கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று 13ஆம் திகதி தொடக்கம் வீதியுலா வரும். இறுதி ரந்தோலி பெரஹரா 22ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று இடம்பெறும்.

பெரஹர உற்சவங்களுக்கான ஏற்பாடுகளை ஆராயும் நோக்குடன், ஸ்ரீதலதா மாளிகையின் பல்நோக்கு மண்டப கட்டிடத்தில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே மேற்படி தகவல்களை அறிவித்தார்.

பெரஹரா ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலில் மல்வத்தை பீடத்தின் பதிவாளர், நான்கு தேவாலயங்களின் பஸ்நாயக நிலமே பொறுப்பாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இதன் பிரகாரம், பெரஹராவில் பங்கேற்கும் கலைஞர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப பிறருடன் தொடர்புபடாத முறையில் தங்க வைக்கப்பட்டு, வீதியுலாவில் கலந்து கொள்வார்கள்.

பௌத்த சமயத்தவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா இதுவாகும். புத்த பெருமானின் புனித தந்தம் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது உலகிலேயே புனிதமான வணக்கத் தலமாகப் போற்றப்படுகின்றது.

1592 தொடக்கம் 1815 வரை கண்டி இராச்சியம் நிலவிய காலத்தில் கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆட்சி வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளபடியால், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகை மிக முக்கிய தலமாகக் கொள்ளப்படுகின்றது.

எசல பெரஹெர என்பது ஆடி மாதத்தில் இடம்பெறுகின்ற வைபவமாகும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான எசல பெரஹெரா கண்டியின் நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து சிவன் கோயிலில் காப்புக்கட்டுதலுடன் கடந்த 09ம் திகதி அதிகாலை சமய சம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 12ம் திகதி வரையும் உள்வீதி வலம் வரும் உற்சவம் நடைபெற்றது.

இன்று 13 ஆம் திகதி மாலை 7.18 மணியளவில் கும்பல் பெரஹரா நடைபெறும். அதனைத் தொடர்ந்து 18ம் ரந்தோலி ஊர்வலம் ஆரம்பமாகும். ரந்தோலி ஊர்வலம் தொடராக 22 ஆம் திகதி வரையும் கண்டி நகரின் பல வீதிகளில் இரவு நேர ஊர்வலமாக வலம் வரும்.

ரந்தோலி ஊர்வலம் முடிவடைந்ததுடன் அடுத்த நாளான எதிர்வரும் 23ஆம் திகதி காலை 11.50 மணிக்கு பெரஹர நிகழ்வுகள் முடிவடையும்.

அதனைத் தொடர்ந்து, அதன் இறுதி நிகழ்வாக கண்டி எசல பெரஹர உற்சவம் சிறந்த முறையில் நிறைவடைந்ததனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். அன்றைய தினம் வழக்கம் போல் மாலை 5.00 மணியளவில். பெரஹர உற்சவத்தில் கலந்து கொண்ட யானைகளுக்கு ஜனாதிபதியினால் பழங்கள் ஊட்டப்படுவது வழமையான சம்பிரதாய நிகழ்வு ஆகும். அதனைத் தொடர்ந்து பெரஹரா நிகழ்வுகளில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படுவது சம்பிரதாய நிகழ்வாகும்.

இந்நிகழ்வின் போது சிறந்த முறையில் பெரஹரா நிறைவடைந்தது பற்றிய தகவல் அடங்கிய பேழையை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே ஜனாதிபதிக்கு வழங்குவார்.

எசல பெரஹர உற்சவத்தை கண்டு களிக்க கடந்த காலங்களில் நாடெங்குமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டி நகருக்குள் வருவது வழக்கமாகும். வெளிநாட்டவரும் வருவதுண்டு. ஆனால் இம்முறை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எசல பெரஹரா பார்வையாளர்கள் இன்றி வீதியுலா வருகின்ற போதிலும், பெருமளவில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவித்தார். மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் பெரஹரா முடியும் வரையில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என தியவதன நிலமே கூறினார்.

பௌத்த மதத்தின் புனித சின்னமான பேழையும், தேவாலயங்களின் திருவாபரணங்களும் நகர் வீதி வலம் வருதலும் மற்றும் தவில், நாதசுரம், கரகம், காவடி, முதலான தமிழர்களின் பாரம்பரியக் கலைகளுடன் கூடியதாக பெரஹரா ஊர்வலங்கள் அமைந்துள்ளன. கண்டி இராசதானியின் கடைசி மன்னர்கள் தென்னிந்திய நாயக்கர்களாவர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் வருடாந்த பாரம்பரிய நிகழ்வுகளில் மிகுந்த அலங்கார வைபவமாக திகழும் கார்த்திகை மாத பௌர்ணமி தின தீபவிழா மிகச் சிறப்பாக கண்டி தலதா மாளிகையில் கொண்டாடப்படுகிறது.

உலக இந்து வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் தீபங்களேற்றி வழிபடப்படும் கார்த்திகை விழாவானது தலதா மாளிகையிலும் இடம்பெற்று வருவது பண்டைக் கால இந்து – பௌத்த ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகுமென்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

எம்.ஏ.அமீனுல்லா

 

 


Add new comment

Or log in with...