நாமல் கருணாரத்ன மற்றும் ஜேவிபி ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஐவரும் வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஐவரையும் தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன சரணடைந்ததை தொடர்ந்து கைது (10.50am)
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பொது வெளியில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜேவிபி ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றையதினம் பதுளை, போகஹபுர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கடந்த ஜூலை 01ஆம் திகதி பதுளை, பொரலந்த பகுதியில் போராட்டம் நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே ஐவர் கைது செய்யப்பட்டு, வெலிமடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஐவரையும் தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விவசாயிகளுக்கான பசளையை வழங்குமாறு தெரிவித்து குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கைது செய்யப்பட்ட நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய, பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள், மறு அறிவித்தல் வரை மேற்கொள்ளக்கூடாது என, பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment