பதுளை அரச மருத்துவமனையில் டொக்டர் உட்பட 31 நோயாளிகளுக்கு கொரோனா

- புற்றுநோயியல் பிரிவு பூட்டு

பதுளை மாவட்ட பிரதான பொது அரசினர் மருத்துவமனையின் புற்று நோயியல் பிரிவில் டொக்டர் உட்பட 31 நோயாளர்களுக்கு நேற்று கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதால் புற்றுநோயியல் பிரிவு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆம் திகதி, இம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே, மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப் பரிசோதனை அறிக்கைகள் நேற்று வெளிவந்த போதே அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் தாதிகள் இருவருக்கும் பணியாளர்கள் ஆறு பேருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியானமை தெரிய வந்துள்ளது. இவர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை ஏற்கனவே ஏற்றியிருந்தவர்களென்றும் தெரிய வருகின்றது.இதைத் தொடர்ந்து 60 நோயாளர்கள், பணியாளர்கள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பதுளையில் மேலும் ஒருவர் மரணம்

பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்றால் மரணமாகியுள்ளார்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த வினித்தகம என்ற பகுதியை சேர்ந்த 71 வயது நிரம்பிய ஒருவரே மரணமாகியுள்ளவராவார்.

இம் மரணத்துடன் பதுளை அரசினர் மருத்துவமனையில் இரு மரணங்களும் பதுளை மாவட்டத்தில் ஒன்பது மரணங்கள் பதிவாகியுள்ளன.

பதுளை தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...