பொத்துவில் - பொலிகண்டி; தடைகள் ஏற்பட்டபோது எம்.பிக்கள் முன்னின்றனர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சியில் தடைகள் வந்த போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டார்கள் என வடக்கு, கிழக்கு சிவில் சமூக இணைத்தலைவர் ச. சிவயோகநாதன் தெரிவித்தார்.

நேற்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

எந்த சமூகத்திலும் முன்னிலைப்படுத்தப்படும் வழிகாட்டுபவர்கள் சமயத்தலைவர்கள். அதனால்தான் மத தலைவர்களை முன்னிலைப்படுத்தி பேரணியை ஏற்படுத்தினோம். சில தடைகள் வந்த போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நின்று செயற்பட்டனர்.

இறுதிக் கட்டத்தில் ஒரு இலட்சம் வரையான மக்கள் திரண்டிருப்பார்கள். அதிகளவான மக்கள் வந்திருந்தாலும் விபத்து, மற்ற சமூகங்களுடனான குரோதங்களோ இல்லாமல் அமைதியாக முடிந்தது.

பல கட்சிகள் பல சமயங்கள் பல குழுக்கள் ஒன்றிணைந்து இறுதி வரை ஒற்றுமையாக இதனை முடித்தார்கள்.

ஒவ்வொரு பகுதிகளிலும் வந்து கலந்து கொண்டவர்களையும் சேர்த்தால் 4,5 இலட்சம் மக்கள் இணைந்திருப்பார்கள் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...