பேலியகொடை புதிய மெனிங் சந்தை திங்கட்கிழமை திறப்பு

உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பசில் பணிப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளது.

மெனிங் சந்தையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதாரத்துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மெனிங் சந்தையின் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அவர் அந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின்போதே அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

அதன்போது மேலும் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ;

பேலியகொடை மீன் சந்தை மற்றும் மெனிங் சந்தை ஆகியவற்றை மூடிய மையானது விவசாயிகளுக்கும் விவசாய உற்பத்தியாளர்களுக்கும் மீனவர்களுக்கும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பையும் அத்துடன் அவர்களது வாழ்வாதாரத்தில் நேரடி பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கிணங்க மிக விரைவில் மெனிங் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...