உருகுவே கால்பந்து நட்சத்திரம் லூயிஸ் சுவாரெசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் உருகுவே மற்றும் பிரேசில் அணிகள் மோதவிருந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் சுவாரெசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோல் காப்பாளர் முனோஸ் (38) செய்து கொண்ட சோதனையிலும் தொற்று இருப்பது தெரிந்தது. அதனால் உடனடியாக இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனை உறுதி செய்த உருகுவே கால்பந்து சம்மேளனம், ‘கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள வீரர்கள் இருவரும் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.
பிரேசிலுக்கு எதிரான போட்டியில் சுவாரெஸ் பங்கேற்க முடியாத நிலையில், ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து தொடரில் வரும் சனிக்கிழமை அத்லெடிகோ மெட்ரிட் மற்றும் பார்சிலோனா ஆட்டத்திலும் அவரால் விளையாட முடியாது.
பார்சிலோனா அணிக்காக 2014 முதல் 2020 செப்டம்பர் வரை விளையாடி வந்த 33 வயதான சுவாரெஸ் அண்மையிலேயே அத்லெடிகோ மெட்ரிட் அணியுடன் இணைந்தார்.
Add new comment