இராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை

இராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள் இதுவாகக் கருதப்படுகிறது.

டெல்லியில் இருந்து வந்தது முதல் மீண்டும் டெல்லிக்கு திரும்பும் வரைக்கும் முகக்கவசம் அணிந்தவாரே விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி. இராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக கோடிக்கணக்கான இராம பக்தர்கள் 'ராம்' என்று பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்கள் அனைத்தும் இராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக பல ஆண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வசதி படைத்த பக்தர்கள், நிறுவனங்கள், மடலாயங்களில் இருந்து தங்கம், வெள்ளி, செங்கற்கள் கிலோ கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

குஜராத் அகமதாபாத் ஜெயின் சமூக மக்கள் இணைந்து இராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக 40 கிலோ வெள்ளி செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்களை ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூகத்தினர் வழங்கியுள்ளனர். இந்த செங்கற்களில் ஒன்றினை பிரதமர் மோடி எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை நேற்று தொடக்கி வைத்தார். 

இராமர் கோவிலுக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி அனுமான் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் குழந்தை இராமரை வழிபட்ட மோடி, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அதன் பின்னர் ஆரத்தி காட்டி வணங்கினார். இதனையடுத்து இராம ஜென்ம பூமியில் மரக்கன்றை நட்டு வைத்தார். 

இதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் நடைபெற்ற யாக நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பூமி பூசை நடைபெற்றது. யாகத்தில் பங்கேற்ற மோடி, மந்திரங்களை கூறினார். வரலாற்று சிறப்பு மிக்க இராம ஜென்ம பூமி பூசை விழா நேற்று நடைபெற்றதை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. பூமி பூசை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தந்ததன் காரணமாக அயோத்தி நகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்று உள்ளனர். பூமி பூசை, அடிக்கல் நாட்டுவிழா அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. 

'ஜெய் ஸ்ரீராம்' முழக்கத்திற்கு இடையே முதல் வெள்ளி செங்கலை எடுத்து கொடுத்தார் பிரதமர் மோடி. இந்த விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். 


Add new comment

Or log in with...