உலக கொரோனா தொற்று 17 மில்லியனாக அதிகரிப்பு

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் நேற்று 17 மில்லியனை எட்டியுள்ளது.

இந்த வைரஸ் தொற்றை ஓர் உலகளாவிய சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்து சரியாக ஆறு மாதத்தை எட்டும்போதே இந்த உச்சத்தை எட்டியுள்ளது.  

ஜோன் ஹோப்கின்சன் பல்கலைக்கழகத்தினால் தொகுக்கப்பட்டு வரும் பொது சுகாதார தரவுகளின்படி, நேற்றைய தினமாகும்போது உலகெங்கும் பதிவான கொரோனா தொற்று சம்பவங்கள் 17,031,281 ஆக அதிகரித்ததோடு, உயிரிழப்பு எண்ணிக்கை 667,000ஐ விஞ்சியுள்ளது.  

இதன்படி கொரோனா தொற்று சம்பவங்கள் 16 மில்லியனில் இருந்து 17 மில்லியனை எட்டுவதற்கு நான்கு நாட்களே எடுத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே 10 மில்லியன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி நோய்த் தொற்று சம்பவங்கள் 3 மில்லியனில் இருந்து 10 மில்லியனை எட்டுவதற்கு இரு மாதங்களே எடுத்துக் கொண்டுள்ளது.  

இதில் கடந்த புதன்கிழமை ஒரு நாளைக்குள் உலகெங்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 289,100க்கும் மேல் பதிவாகி உள்ளது.  

பிரேசில், இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, உஸ்பகிஸ்தான் மற்றும் மொரோக்கோ உட்பட பல நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவில் நாளாந்த நோய்த் தொற்று சம்பவங்களில் அதிகரிப்பு எற்பட்டுள்ளது.  

ஜூலை நடுப்பகுதி தொடக்க சராசரியாக நாளாந்தம் 200,000 க்கும் அதிகமாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் ஒட்டுமொத்த வைரஸ் தொற்றின் வளைவு கடந்த ஜுன் ஆரம்பம் தொடக்கம் நிலையாக உயர்ந்து வருகிறது.  

உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்றுச் சம்பவங்களுடன் 150,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.    


Add new comment

Or log in with...