நீதி, நேர்மையான தேர்தலுக்கு ஆணைக்குழு வழி கோல வேண்டும்

வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்! 

பொதுத்தேர்தல் நீதி,நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  வவுனியாவில் அண்மையில் (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை,கட்சி ஒன்றின் தலைவரென்ற வகையில் விடுக்க விரும்புகிறேன்.முறைாயான, நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தவே 2015இல் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.  அதன் பிரதிபலனாக உருவாக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, இம்முறை  பொதுத்தேர்தலில் அதன் நோக்கத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். ஆணைக் குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும். 

ஆளுங்கட்சிக்கு சார்பானதாகவோ, ஆளுங்கட்சி ஆசனங்களை கூட்டிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் தேர்தலாகவோ இத்தேர்தல் அமைந்துவிடக் கூடாது. நேர்மை, சுயாதீன செயற்பாடுகள்

உறுதிப்படுத்தப்படல் அவசியம்.எதிர்க் கட்சியினர் தமக்கு உரித்தான ஆசனங்களை முறையாகப் பெற்றுக் கொள்வதற்கு ஆணைக்குழு வழிசமைக்க வேண்டும். 

களத்தில் நிற்கும் அனைத்து வேட்பாளருக்கும் சம அந்தஸ்த்தும் சம சந்தர்ப்பமும் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அரச இயந்திரங்கள், அதிகாரப் போக்குகளால், ஒருசாரார் ஆதாயம் அடையக்கூடிய தேர்தலாக இது மாறிவிட்டால் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கி விடும். 

தேர்தலை விட மக்களின் சுகநல வாழ்வையே நாம் பிரதானமாகக் கருதுகின்றோம். மக்களினதும் வாக்காளர்களினதும் உயிருக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் கட்சிகளினது கொள்கைகள், வேட்பாளர்களினது கருத்துக்கள் வாக்காளர்களிடம் எவ்வித தடங்கலுமின்றி சென்றடையும், ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.    


Add new comment

Or log in with...