டிரோன் உதவியுடன் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்

டிரோன் உதவியுடன், வியூகம் வகுத்து வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது. ‘லோக்கஸ்ட்’ வகையான இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் எமன், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறது.

பசுமையான இடங்களை நோக்கி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் புகுந்து, நாசம் செய்கிறது. இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களின் விளைநிலங்களை சூறையாடியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வேளாண்துறை சொல்லி இருந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் இருந்ததை பார்த்து விவசாயிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதனை ஆய்வுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களை சூறையாடும் ‘லோக்கஸ்ட்’ வகை வெட்டுக்கிளிகள் இல்லை என்றும், சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் எருக்கஞ்செடிகளில் மட்டும்தான் காணப்படும் எனவும் கூறினர்.

இந்தநிலையில், தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி வருகிறது. வானூர்தி துறையின் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் உள்பட சுமார் 80 பேர் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...