இந்தியாவுக்கு 2.2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் ஆசிய வங்கி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்திய ரூபாயில் சுமார் 16 ஆயிரத்து 500 கோடி நிதி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாற்சுகு அசகாவா (Masatsugu Asakawa), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உரையாடியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தவும் நிவாரணம் வழங்கவும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அசகாவா பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் அவசர தேவைகளுக்கு ஆதரவளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதிபூண்டுள்ளது. இப்போது சுகாதாரத் துறைக்கு உடனடி உதவியாக 2.2 பில்லியன் டொலரை அனுப்பவுள்ளோம். தொற்றுநோயினால் ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நிதித் துறை மீதான பொருளாதாரத் தாக்கத்தைத் தணிக்க உதவுகிறோம்.

தேவைப்பட்டால் இந்தியாவுக்கான உதவித்தொகை மேலும் அதிகரிக்கப்படும். இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசர உதவி, கொள்கை அடிப்படையிலான கடன்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதிகளை விரைவாக விநியோகிக்க வசதியாக பட்ஜெட் ஆதரவு உள்ளிட்ட அனைத்து நிதி வழிமுறைகளையும் பரிசீலனை செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...