"நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்"

ஆண்டவர் இயேசு நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கின்றீர்கள் என்று கூறுகின்றார். உப்பு, ஒளி இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கின்றது. அது என்ன ஒன்றுமை எனில், தன்னை இழப்பதாகும்.

உப்பு தன்னை இழந்து உணவிற்குச் சுவையூட்டுகின்றது.... ஒளியோ தன்னைக் கரைத்துக்கொண்டு அல்லது தன்னை இழந்து உலகிற்கு ஒளிகொடுக்கின்றது.

அப்படியானால் இயேசு மக்களைப் பார்த்து அல்லது சீடர்களைப் பார்த்து  நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய், ஒளியாய் இருக்கிறீர்கள் என்று கூறுகின்றார் என்றால், அவர்கள் தங்களை இழந்து விண்ணகத் தந்தைக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதுதான் இதன் பொருளாக இருக்கின்றது.

  துறவி ஒருவர் இருந்தார். அவர் மலையடிவாரத்தில் ஒரு குடிசை அமைத்து அங்கு வருவோருக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.

 ஒருநாள் அவரைச் சந்திக்க வந்த இளைஞன் ஒருவன் அவரிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தான். தற்செயலாக அவன் வெளியே பார்த்தபொழுதுதான் நன்றாக இருட்டியிருந்தது தெரிந்தது. உடனே அவன் துறவியிடம், “நேரமாகிவிட்டது. கிளம்புகிறேன்” என்றான். துறவி அவனிடம், “இன்றிரவு இங்கு தங்கிவிட்டு அதிகாலையில் கிளம்பு... இது கொடிய விலங்குகள் நடமாடக்கூடிய பகுதி” என்றார். அவனோ அங்கிருந்து கிளம்புவதில் விடாப்பிடியாக இருந்ததால் அவர் அவனை அங்கிருந்து போக அனுமதித்தார்.

  வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்தது. இப்பொழுது அவனுக்குள் ஊருக்குப் போகவா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதைக் கவனித்த துறவி தன்னுடைய குடிசையிலிருந்த ஒரு விளக்கை எடுத்து அவனிடம் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு உன்னுடைய பயணத்தைத் தொடர்” என்றார். அவனும் துறவி கொடுத்த விளக்கை வைத்துக்கொண்டு நடந்து சென்றான்.

 அவனுடைய நடையில் ஒருவிதமான தளர்ச்சி தெரிந்தது. அதைக் கவனித்த துறவி வேகமாக அவனருகே சென்று, அவன் வைத்திருந்த விளக்கை ‘பூ’ என ஊதினார். விளக்கு உடனே அணைந்துபோக, அவன் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான். “என்ன சுவாமி இப்படிச்செய்து விட்டீர்கள். இனி நான் ஊருக்கு எப்படிப் போவது?” என்றான்.

துறவி, அவனை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டுத் தீர்க்கமான குரலில் சொன்னார்: “இரவல் விளக்கு நீண்ட நேரம் துணைக்கு வராது. உனக்குள் இருக்கும் விளக்கே/ஒளியே இறுதிவரை உன்னோடு வரும். உன் கையில் விளக்கு தேவையென்றால் உனக்குள்ளே பயம் உறைந்திருக்கின்றது என்று பொருள். உள்ளே துணிவிருந்தால் உனக்கு விளக்கு தேவையில்லை. அதனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணத்தைத் தொடர்.”   துறவி சொன்ன இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட இளைஞன். கையில் விளக்கேதும் இல்லாமல் தனக்குள் இருந்த துணிவு என்ற விளக்கைக் கொண்டு அந்த அடர்ந்த காட்டின் வழியாக நடந்து வீடு வந்து சேர்ந்தான்.

 உனக்கு நீயே விளக்கு/ ஒளி என்ற உண்மையை எடுத்துரைக்கும் இந்த கதை மேற்குறிப்பிட்ட இறைவார்த்தையின் முதன்மைச் சிந்தனையை அப்படியே எடுத்துரைப்பதாக இருக்கின்றது. அந்த இறைவார்த்தை நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையை எடுத்துக்கூறுகின்றது. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.

நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்;தன்னை இழக்கத் தயராய் இருக்கவேண்டும்.  சீடத்துவ வாழ்வில் இழத்தல் என்ற பண்பு முக்கிய இடம் வகிக்கின்றது. “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24) என்று சொல்லும் இயேசு, நாம் நம்மை இழக்கின்றபொழுது மட்டுமே உலகிற்கு உப்பாக ஒளியாக இருக்க முடியும் என்று கூறுகின்றார்.அஞ்சாதிருக்கவேண்டும். உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்க தன்னை இழப்பது முதல்படி என்றால் அஞ்சாதிருப்பது அடுத்த படி என்று சொல்லலாம். இதற்கான தெளிவினை நற்செய்தி வாசகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம். நற்செய்தியில் இயேசு, “எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின்மீதே வைப்பர்” என்று கூறுகின்றார்.

 இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கின்றபொழுது திருவிவிலிய அறிஞர்கள்,

 “கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள்மீது தொடர் தாக்குதல்களும் வன்முறைகளும் நடந்த வன்ணமாய் இருந்தன.

இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்களில் ஒருசிலர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தால் தங்களுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து அஞ்சி அஞ்சி வாழாமல் அஞ்சாமல் துணிவோடு சான்று பகர்ந்து வாழவேண்டும்” என்று விளக்கம் அளிப்பார்கள்.  ஆம், உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கவேண்டியவர்கள் பிறர் என்ன நினைப்பார்களோ என்று தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்துகொண்டு அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள் எனில், அவர்களால் உலகிற்கு ஒளியாக, உப்பாக இருக்க முடியாது.

 அவர்கள் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கமுடியும்.வறியோருக்கு உதவ வேண்டும்

 உலகிற்கு உப்பாக, ஒளியாக இருப்பதற்கான மூன்றாவது படி, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். அது எப்படி வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் வழியாக நாம் உலகிற்கு உப்பாக, ஒளியாக மாற முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்தின் இறுதியில், “வறியோரின் தேவையை நிறைவுசெய்வாயானால் இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும் “ என்று கூறுகின்றார்.  இறைவாக்கினர் எசாயா கூறுவதுபோல் நாம் வறியோரின் தேவைகளை நிறைவுசெய்பவர்களாக இருக்கின்றோமா? அல்லது அவர்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

 ஆகையால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் வறியோருக்கு உதவி செய்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவேண்டும். அப்பொழுது நாம் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்க முடியும் என்பது உறுதி.

 ‘நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்’ (எசா 1:17) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால், நாம் எல்லா மக்களுக்கும் நன்மை செய்து, உலகிற்கு ஒளியாக, உப்பாக விளங்குவோம்.

அருட்பணி
மரிய அந்தோனிராஜ்


Add new comment

Or log in with...