திறைசேரியுடன் அரசு விரைவில் பேச்சு
தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு வட்டியற்ற கடனை வழங்குவதை அரச வங்கிகள் இடைநிறுத்தி இருந்தன.
இத்திட்டத்தை நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதியே ஆரம்பித்து வைத்தார். அந்தத் திட்டத்தில் ஆறாவது குழு வரை நாம் தொடர்ந்து சாத்தியமானதாக நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கடுத்த ஏழாவது குழுவுக்கு, அந்த வட்டியில்லா கடனை வழங்குவது தொடர்பில் அரசாங்க வங்கிகள் பின்னடைவைக் காட்டின.
இதையடுத்து, இக்கடன்களை வழங்கும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஐயாயிரம் ரூபாவாக அந்த கடனைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு முன்னர் முதலாவது இரண்டாவது தடவையாக கடன் பெற்றுக் கொண்டவர்கள் அந்த கடனை திருப்பி செலுத்துவதை தவிர்த்து வந்ததாலே, அந்த வங்கிகள் அதிருப்தியை வெளியிட்டன. எனினும், அதனை வைத்து அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்த முடியாது. வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டதற்காக அடுத்து வரும் வாடிக்கையாளருக்கு கடன் கொடுப்பதை நிறுத்த முடியாது. அவ்வாறு செய்தால் அது வங்கி சம்பிரதாயத்திற்கும் முரணானதாகவே அமையும்.
எவ்வாறெனினும், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதனை பெற்றுக் கொடுக்கும் வகையில் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறோம்.
அந்த வகையில் கல்வி அமைச்சு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் திறைசேரியுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்