மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி 32 வயதுடைய தந்தையும் 02 வயது 10 மாதமும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை, கொட்டகேபிட்டிய மைப்பல கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. தந்தையும் மகளும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சுனில் சாந்த குமார மற்றும் அவரது மகள் எஸ்.எம்.அபின்னியா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சுனில் சாந்தவின் மனைவி நான்கு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்தார்.இந்நிலையில், அவர் தனது 11, 07 வயதுகளைடைய இரண்டு மகன்கள் மற்றும் இந்த மகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வீட்டின் அருகே காய்கறித் தோட்டம் செய்து வரும் இவர், அங்குள்ள மிளகாய் செடியை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற, சுமார் ஒரு அடி உயரத்துக்கு கம்பி அறுத்து, மின்சாரம் இணைத்துள்ளார்.
குழந்தைகள் பாடசாலைக்கு சென்ற பிறகு, காலை 10 மணியளவில் மரக்கறி தோட்டத்துக்கு மருந்து தெளிக்கச் சென்ற இவர், மின்சாரத்தை துண்டிக்க மறந்து விட்டார். குழந்தை பிளாஸ்டிக் கோப்பையுடன் தோட்டத்துக்கு சென்றதாகவும் இருவரும் மின்சாரம் தாக்கி தரையில் விழுந்ததாகவும் சுனில் சாந்தவின் சகோதரர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
(கம்பளை நிருபர்)