அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலான அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை விளையாட்டு அரங்கில் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானது. மாவட்டத்திலுள்ள 14 இற்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.
இச்சுற்றுப் போட்டித் தொடரை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலையின் தலைவரும், பேருவளை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹசன் பாஸி, பேருவளை உதைபந்தாட்ட சங்க உபதலைவரும் பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.எம் பதியுத்தீன், பாணந்துறை பிரதேசசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தாஹிர் பாஸி, பேருவளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில், மாவட்ட சம்மேளன செயலாளர் ஸம்ஸுல் மக்கி ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
மேற்படி போட்டி இணைப்பாளர்களான எம்.என்.எம் ரிம்ஸான், மொஹம்மத் பஸான், சம்மேளன ஊடகப் பணிப்பாளர் பீ.எம் முக்தார், முன்னணி உறுப்பினர்களான மொஹம்மத் இம்தாத் எம்.எஸ்.எம் அக்ரம், காரி எம்.எஸ்.எம் நளீர், மொஹம்மத் ஜமால், மொஹம்மத் பிஷ்ர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பேருவளை பீ.எம். முக்தார்