யாழ்ப்பாணம் நகரில் பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (24) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லையினுள் இந்த இளைஞர் உயிரிழந்தமையால், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த இளைஞருக்கு உடற்கூற்றுப் பரிசோதனை கடந்த திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது, நீதவான் நேரில் சென்று, சட்ட வைத்திய அதிகாரியிடம் இப்பரிசோதனை தொடர்பாக கேட்டறிந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு நீதவான் சென்று, சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதுடன், சிறைச்சாலை அத்தியட்சகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.