இணையப் பயன்பாட்டுக்காக ஒழுங்குமுறைப்படுத்தல் அவசியம்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்வதால் சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல சமூக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,கட்டுப்பாடுகளுடன் இவற்றை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (19) நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதில் உரையாற்றிய அமைச்சர்:அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கட்டுப்பாடுகளுடனே பயன்படுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில், தற்போதைய சமூகம் இடைவிடாத போட்டியிலுள்ளது. போட்டித்தன்மை மற்றும் சாதனை என்பவற்றுக்காக டிஜிட்டல் தொழில்நுட்ப பாவனை அதிகரித்துள்ளது.இதனால்,
ஒரு தலைமுறை மன அழுத்தத்திலும் இருப்பதைக் காண்கிறோம். எனவே,எதிர்கால பயிற்சித் திட்டங்களில் மனநல மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்துங்கள்.
நாட்டில், பிராந்திய மட்டத்தில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு வழங்க பல அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
331 பிரதேச செயலகப் பிரிவுகளும் 25 மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் மாதாந்த அபிவிருத்திக் குழுவை நடத்துகின்றன.
இதன் மூலம் இப்பிரச்சினைகளில் பெருமளவு தலையீடு செய்ய முடியும்.டிஜிட்டல் தொழில்நுட்ப பாவனையால்,
குழந்தைகள் மற்றும் கல்வி என்பன பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.