243 இலங்கை காலாட்படையின் ஓராண்டு நிறைவையொட்டி பிரார்த்தனை நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை மாலை காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப்பள்ளிவாயலிலும், காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலிலும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243 இலங்கை காலாட்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க பங்கேற்றுக் கொண்டதுடன், 243 இலங்கை காலாட்படையின் மட்டக்களப்பு, கல்லடி இராணுவ முகாம் தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினன்ற் கேர்ணல் வீரசிங்க உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப்பள்ளிவாயலில் அதன் பரிபாலனசபைத் தலைவர் கே.எல்.எம். பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயலின் இமாம் அஸ்ஸெய்ஹ் இல்ஹாம் பலாஹி விசேட பிரார்த்தனையை நடத்தினார்.
இந்நிகழ்வில் பள்ளிவாயலின் பிரதம இமாம் மௌலவி முஸ்தபா பலாஹி, பள்ளிவாயலின் செயலாளர் முகம்மட் இர்பான் உட்பட நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை வலியுல்லாஹ் பொறுப்பு நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களின் வழிகாட்டலில் மௌலவி எம்.ஏ.மஜீத் ரப்பாணி தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் மௌலவி ஜுமான் பிரார்த்தனை நடத்தினார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மௌலவி கே.ஆர்.எம்.ஸஹ்லான் ரப்பாணி மற்றும் உலமாக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உலமாக்களுக்கும் பள்ளிவாயல் நிருவாகிகளுக்கும் மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243 இலங்கை காலாற்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.