தெற்கு பாகிஸ்தானில் இறைத்தூதர் முஹமது நபியின் பிறந்த தினமான மீலாதுந் நபி கொண்டாட்டத்தை ஒட்டி இடம்பெற்ற பேரணி மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டு 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மதங் மாவட்டத்தில் நேற்று (29) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இது தற்கொலை தாக்குதல் போன்று இருப்பதாக மூத்த பொலிஸ் அதிகாரியான ஜாவித் லஹ்ரி தெரிவித்துள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபர் நவாஸ் கிஷ்கோரியின் வாகனத்திற்கு அருகிலேயே தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசலுக்கு அருகிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதோடு சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குலுக்கு எவரும் பொறுப்பேற்காதபோதும், பயங்கரவாத பின்னணிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இறைத்தூதரின் பிறந்த நாளை ஒட்டி பொது நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வுகளை ஒரு சில முஸ்லிம் தரப்புகள் தேவையற்றதாக கருதுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.